/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார பணிகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம்
/
சுகாதார பணிகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம்
ADDED : பிப் 16, 2024 12:11 AM

மறைமலை நகர்:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைவருக்குமான சுகாதாரத்தை நோக்கி, நகர்ப்புற அளவிலான கலந்தாலோசனை கூட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மறைமலை நகர் நகராட்சி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து, பொது மக்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், 21 வார்டுகளிலும் நடைபெற்று வரும் துாய்மை பணிகள் குறித்து விளக்கப்பட்டது. பொது இடங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம், நகரின் பல இடங்களில் கழிவுநீர் கொட்டப்பட்டு வருவதாக, கூட்டத்தில் பங்கேற்றோர் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக, நகராட்சி தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.