/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெட்ரோ பணித்தளத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கிரேன்
/
மெட்ரோ பணித்தளத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கிரேன்
ADDED : பிப் 03, 2025 11:50 PM

கோவிலம்பாக்கம்,சென்னை புறநகர் பகுதியான மேடவாக்கம்-- மடிப்பாக்கம் பிரதான சாலையில், கடந்த 2022 முதல் மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் நடக்கின்றன. தற்போது, ராட்சத துாண்களில் கான்கிரீட் பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த தடத்தில், கோவிலம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் 50 டன் எடையிலான ராட்சத கிரேன் வாயிலாக, கான்கிரீட் பாதை அமைக்க போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றும் பணியில், ஏழு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிரேன் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. சுதாரித்த ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்.
சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, மேடவாக்கம் - -மடிப்பாக்கம் பிரதான சாலையில், உடனே போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து, மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.