/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்கா இடம் தனி நபரால் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் தாமதம்
/
பூங்கா இடம் தனி நபரால் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் தாமதம்
பூங்கா இடம் தனி நபரால் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் தாமதம்
பூங்கா இடம் தனி நபரால் ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவிட்டும் மீட்பதில் தாமதம்
ADDED : ஜூன் 05, 2025 08:51 PM
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மீட்க அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள, 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகரில், பூங்கா அமைக்க 34.5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த இடம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வீடு கட்டப்பட்டு உள்ளது.
பகுதிவாசிகள் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊரப்பாக்கத்தில், 1989ம் ஆண்டில், பிரியா நகர் - 2 மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில், சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க, 14,958 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.
இப்பகுதி வளர்ச்சியடைய துவங்கியதும், இந்த இடத்தை போலி ஆவணம் வாயிலாக, தனி நபர் ஒருவர் சொந்தமாக்கி உள்ளார். அதற்கு, 'பட்டா'வும் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பகுதிவாசிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட 'பட்டா' ரத்து செய்யப்பட்டது. அதன் பின், நிலத்தை மீட்கவும், கட்டடங்களை அப்புறப்படுத்தவும் கோரி, பகுதிவாசிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதன்படி, கடந்த பிப்., 25ம் தேதி, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கட்டடம் அகற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாமதத்தால், தற்போது வரை அந்த இடம் தனிநபர் வசமே உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்த இடத்தை முழுமையாக மீட்டு, பகுதிவாசிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, நடைபாதையுடன் கூடிய சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.