/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கையில் ஆர்ப்பாட்டம் லாரி உரிமையாளர்கள் கைது
/
சிங்கையில் ஆர்ப்பாட்டம் லாரி உரிமையாளர்கள் கைது
ADDED : செப் 21, 2024 02:03 AM

மறைமலை நகர்:தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கங்கள் சார்பில், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தாம்பரம் காவல் துறை சார்பில், லாரிகளுடன் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதியளிக்கப்பட்டு இருந்தது.
அசம்பாவிதங்கள் ஏற்படாதபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை நோக்கி வந்த மணல் லாரிகள், ஜி.எஸ்.டி., சாலையில், மகேந்திரா சிட்டி 'ஜீரோ பாயின்ட்' மற்றும் ஸ்ரீபெரும்புதுார் சாலை திருக்கச்சூர் பகுதியில், ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, லாரி உரிமையாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாக உறுப்பினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மணல் குவாரிகளை திறக்கக்கோரியும், லஞ்சம் கேட்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பேரணி செல்ல முயன்றனர்.
அவர்களையும் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முதல்வரை சந்திக்க முடியவில்லை
தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக மணல் வழங்கப்படாததால், கட்டுமான தொழில்கள்
பாதிக்கப்பட்டு உள்ளன. அதிக பாரம் ஏற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வாகனங்களை நிறுத்தாமல், 'ஆன்லைன்' வாயிலாக அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து பல மனுக்கள் அளித்தும், முதல்வரை சந்திக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக, முதல்வர் இல்லத்தை நோக்கி போராட்டம் நடத்தப்படும்.
- யுவராஜ்
தலைவர், லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு.