/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்குகள் அவுட்: கும்மிருட்டில் சாலைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மின்விளக்குகள் அவுட்: கும்மிருட்டில் சாலைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்
மின்விளக்குகள் அவுட்: கும்மிருட்டில் சாலைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்
மின்விளக்குகள் அவுட்: கும்மிருட்டில் சாலைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 14, 2025 01:24 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலைகளில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் சாலை மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன.
இதனால், இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி, விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை - திண்டுக்கல் சாலை விரிவாக்க பணிகளின் போது, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால், மின் விளக்குகள் பல ஆண்டுகளாக வெறும் காட்சிப்பொருளாக, பயனற்ற நிலையில் உள்ளன. இதனால் இருள் சூழ்ந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மருத்துவ செலவு, வாகன பழுது நீக்க செலவு ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோரிடம், பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும், கண்டுகொள்ளப்படாமல் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி, மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, தினமும் சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஊராட்சியில், சந்தைமேடு -- ஒரகடம் சாலை சந்திப்பு, பெரி யபாளையத்தம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி சார்பில், 2019ல் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
முறையான பராமரிப்பு இல்லாததால், பல மாதங்களாக இந்த மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி சார்பில் ஒரகடம் சாலை, அனுமந்தபுரம் குளக்கரை அருகே, ஆஞ்சநேயர் கோவில் அருகில் என மூன்று இடங்களில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த விளக்குகள், தற்போது பல நாட்களாக எரிவதில்லை.
அனைத்து பகுதிகளுக்கும் வெளிச்சம் தரும் வகையில் ஐந்து விளக்குகள் இருக்க வேண்டிய கம்பத்தில், இரண்டு விளக்குகள் மட்டுமே உள்ளன.
இதை, ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் கிராம சபை கூட்டத்தில், தெருவிளக்குகள் பராமரிப்பாளர் ஊதியம் என ஏப்ரல் முதல் செப்., மாதம் வரை, 60,000 ரூபாய் கொடுத்ததாகவும், தெரு விளக்கு பொருத்திய கூலி 96,000 ரூபாய் கொடுத்ததாகவும் வரவு - செலவு காண்பிக்கின்றனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலை -- காஞ்சிபுரம் சாலை மேம்பாலம் அருகிலுள்ள பகுதியில் உள்ள ஐந்து உயர்கோபுர மின் விளக்குகளின், மூன்று விளக்குகள் பல மாதங்களாக எரியாததால், இரவு நேரங்களில் அங்கு திருட்டு பயம் நீடிக்கிறது.
அதே போல செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை, இருங்குன்றம்பள்ளி, பழவேலி போன்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலை மற்றும் மேம்பாலங்களில் உள்ள மின் விளக்குகள் எரியாமல், காட்சிப் பொருளாகவே உள்ளன.
செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பஜார் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் மேம்பாலத்தில் உள்ள ஏழு உயர்கோபுர மின்விளக்குகளில், நான்கு விளக்குகள் எரியாமல் உள்ளன.
அச்சரப்பாக்கம் ஆத்துார் சுங்கச்சாவடியில் உள்ள இரண்டு உயர்கோபுர மின்விளக்குகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன.
திருப்போரூர் அடுத்த மேலையூர் ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் பகுதி, சிவன் கோவில், கொண்டங்கி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள், கடந்த நான்கு ஆண்டுகளாக எரியாமல் உள்ளன.
திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கும் பழுதடைந்து, பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இப்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளதால், சாலைகளில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகள் அதிகரிப்பு, மொபைல் போன் திருட்டு, கஞ்சா விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
- நமது நிருபர்-

