/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடையில் தரக்குறைவாக பேசும் ஊழியர்கள்
/
ரேஷன் கடையில் தரக்குறைவாக பேசும் ஊழியர்கள்
ADDED : ஜன 04, 2025 01:21 AM

பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், 58வது வார்டு, கிருஷ்ணா சாலையில், மூன்று ரேஷன் கடைகள் இயங்குகின்றன.
இதில், கே.டி.,-179 என்ற கடையில், சமீபகாலமாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்குவதில்லை என்றும், அங்கு பணிபுரியும் ஊழியர், வாடிக்கையாளர்களை மரியாதை இன்றி, தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சண்டை போட்டு பொருட்களை வாங்கும் நிலைமைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களை முறையாக கொடுப்பதில்லை.
பச்சரிசி இல்லை என்று, புழங்கல் அரசி மட்டும் கொடுக்கின்றனர். சில நாட்கள் கழித்து சென்று கேட்டால், இயந்திரத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டதாக காட்டுகிறது என, அலட்சியமாக கூறுகின்றனர்.
அதேபோல், பருப்பு இல்லை என்றும், மூட்டை வந்தால் தான் என கூறிவிட்டு, மற்றவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றனர். அது குறித்து கேட்டால், மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும், சண்டை போட்டு பொருட்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு, ரேஷன் கடையில் கூட பொருட்கள் முறையாக கிடைக்காதது, வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக புகார் அளிக்க, தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனரை, 94450 00164 என்ற எண்ணில், இரண்டு முறை தொடர்பு கொண்டும், அவர் இணைப்பை துண்டித்து விட்டார்.

