/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுாரில் ரூ.13 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
கூடலுாரில் ரூ.13 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : அக் 25, 2025 10:54 PM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கூடலுார் கிராமத்தில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, வட்டாட்சியர் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.
மதுராந்தகம் வட்டம், பெரும்பாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்டு கூடலுார் கிராமம் உள்ளது.
அங்கு, கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அதே கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்களால், மேயக்கால் மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.
இதனால், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு வழங்கப்படும் பணிகள் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட 240 ஏக்கர் பகுதியில், 135 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, நேற்று, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மதுராந்தகம் வட்டாட்சியர் பாலாஜி, பெரும்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மேல்மருவத்துார் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
இவற்றின் மதிப்பு, 13 கோடி ரூபாய் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

