/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் போலி டிக்கெட் மோசடி
/
கிளாம்பாக்கத்தில் போலி டிக்கெட் மோசடி
ADDED : ஜன 29, 2024 04:24 AM
சென்னை : கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்பட்ட போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
கிளாம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்ட புறநகர் பேருந்து நிலையத்தில், ஒரே சமயத்தில், 77 ஆம்னி பேருந்துகளை இயக்க, ஐந்து நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தவிர, ஒரே சமயத்தில் 250 பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கான இடவசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்னி பேருந்து நிறுவனங்கள், 'ஆன்லைன்' முறையிலும், தங்களது அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் வாயிலாக மட்டுமே, டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
ஆனால், சில தரகர்கள், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பெயரில் போலி டிக்கெட் அச்சிட்டு, விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதன் அடிப்படையில், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழு, நேற்று ஆய்வு செய்தது.
அப்போது தரகர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருந்த போலி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை விற்போர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.