/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 16, 2025 01:57 AM

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு பயன் பெற, வனத்துறை சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அரசு கட்டடங்களின் வளாக பகுதிகள் மற்றும் விவசாயிகள், தங்களின் விலை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக, மதுராந்தகம் வனச்சரகத்தின் கீழ் அச்சிறுபாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், 20,000 மரக்கன்றுகள், கடந்த ஆண்டு மே மாதம் பதியம் போடப்பட்டன.
தேக்கு, மகாகனி, பாதாம், ஆச்சான், நீர் மருது, வேங்கை, காட்டுவாகை, பூவரசு மற்றும் சவுக்கு மரக்கன்றுகளை பதியம் செய்தனர்.
தற்போது, 2 முதல் 4 அடி உயரம் வரை நன்கு வளர்ந்து, நடவு செய்யும் வகையில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
விவசாயிகள் இந்த மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம்.
ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை, அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுச் செல்லலாம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படும்.
வீட்டின் பின்புறம் உள்ள தோட்டங்களில் மரக்கன்றுகள் நடவும், மரக்கன்றுகள் வழங்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

