/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுனாமி நினைவு தினம் மீனவர்கள் நினைவஞ்சலி
/
சுனாமி நினைவு தினம் மீனவர்கள் நினைவஞ்சலி
ADDED : டிச 27, 2024 02:19 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில், மீனவர்கள் சுனாமி நினைவு தின துக்கம் அனுசரித்தனர்.
கடந்த 2004 டிச., 26ம் தேதி, இந்தோனேஷிய நாட்டின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி பேரலை உருவானது. அப்போது தமிழக கடற்கரை பகுதியையும் சுனாமி அலை தாக்கியதால், பல்லாயிரம் பேர் இறந்தனர்.
மீனவர் உள்ளிட்டோர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, கடலுக்கு இரையாகினர். மீனவர்கள், வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்தனர்.
இத்துயரம் நிகழ்ந்து, தற்போது 20 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நாளான நேற்று, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார், இடைக்கழிநாடு உள்ளிட்ட பகுதிகளில், மீனவர்கள் மீன் பிடிப்பதை தவிர்த்தனர். கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, சுனாமி தாக்குதலில் இறந்தோருக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி, கடலில் பால் வார்த்து, துக்கம் அனுசரித்தனர்.
சதுரங்கப்பட்டினத்தில், மீனவர் பேரவை மற்றும் சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை அமைப்பினர் மவுன ஊர்வலம் சென்று, நினைவஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் அளித்தனர்.
கல்பாக்கம் நகரிய சுனாமி நினைவு பூங்கா நினைவிடத்தில், கல்பாக்கம் ஊழியர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

