/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்த சஷ்டி விழா கொடியேற்றம் கோலாகலம்
/
கந்த சஷ்டி விழா கொடியேற்றம் கோலாகலம்
ADDED : அக் 22, 2025 10:59 PM

திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்போரூரில் உள்ள அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
அதிகாலை, 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, காலை, 5:30 மணிக்கு, கோவில் சிவாச்சாரியார்களால், உத்ச வ கொடி ஏற்றப்பட்டது.
பின், பல்லக்கில் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, கிளி வாகனத்தில் கந்த பெருமான் வீதி உலா நடந்தது.
இவ்வாறு, தினமும் காலை பல்லக்கு உத்சவத்தில் கந்தசுவாமி பெருமான் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதேபோல், இன்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், நாளை இரவு புருஷா மிருக வாகனத்திலும், நாளை மறுநாள் இரவு பூத வாகனத்திலும், 26ம் தேதி இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.
கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார்.
அன்று இரவு, தங்க மயில் வாகனத்தில் கந்த பெருமான் வீதி உலா நடைபெறுகிறது.

