/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
/
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
ADDED : டிச 19, 2024 11:48 PM

மதுராந்தகம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும், வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. தற்போது,'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால், ஏரி முழு கொள்ளளவு நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வேடந்தாங்கலுக்கு பறவைகள் வருகின்றன. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர் காலத்தில் பறவைகள் வரத் துவங்குகின்றன.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
தற்போது கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளிமூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வகையான பறவைகள், வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
இங்கு, 25,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வருவது அதிகரித்து உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.