/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாசரி குன்னத்துார் சாலை கடும் சேதம் சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
/
தாசரி குன்னத்துார் சாலை கடும் சேதம் சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
தாசரி குன்னத்துார் சாலை கடும் சேதம் சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
தாசரி குன்னத்துார் சாலை கடும் சேதம் சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ADDED : ஏப் 04, 2025 02:12 AM

மறைமலைநகர்:தாசரி குன்னத்துார் செல்லும் சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சி, தாசரி குன்னத்துார் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில், நேற்று பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த சாலையைப் பயன்படுத்தி கொளத்துார், தாசரி குன்னத்துார் ஆகிய கிராம மக்கள் சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இச்சாலை 2016ல் பிரதம மந்திரி சாலை திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.
ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் சென்று வருவதால் சேதமடைந்து, தற்போது பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லும் போது, அடிக்கடி ஜல்லி கற்கள் குத்தி டயர்கள் பஞ்சராகி சிரமப்படுகின்றனர்.
சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளதால், அவசரகால வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலையில் உள்ள பள்ளங்களால் முதியவர்கள், கர்ப்பிணியர், நோயாளிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த கிராமத்திற்கு வர தயங்குகின்றன. இந்த பள்ளங்களில் வாகனங்கள் சாய்ந்த நிலையில் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலையை சீரமைக்க உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் இந்த வழியாக செல்லும் கனரக வாகன உரிமையாளர் முயலும் போது, வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன் கொளத்துார் மலை வளைவு பகுதியில், சாலையில் இருந்த பெரிய பள்ளத்தை லாரி உரிமையாளர்கள் மண் கொட்டி சீரமைத்தனர்.
இதையறிந்த இந்த பகுதி வனத்துறை அதிகாரி, கொட்டிய மண்ணை அகற்றாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி, மீண்டும் சாலையில் பள்ளத்தை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில் இரவு நேரங்களில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.