/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காசிமேடு ரவுடி கொலையில் மேலும் நான்கு பேர் கைது
/
காசிமேடு ரவுடி கொலையில் மேலும் நான்கு பேர் கைது
ADDED : ஜன 20, 2025 11:42 PM

காசிமேடு,சென்னை, காசிமேடு திடீர் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன், 33; ரவுடி. இவர், கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
தடுக்க முயன்ற அவரது மனைவி மாலதிக்கும், 30, பலத்த வெட்டு விழுந்தது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசு, 27, அவரது கூட்டாளிகளான ஆன்டனி, 21; எபினேசர், 24; எழிலரசன், 19; மனோஜ், 19 உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில், ரவுடி உலகநாதன் கூட்டாளிகள், வல்லரசையும், அவரது கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிடுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காசிமேடு, திடீர் நகரை சேர்ந்த வெங்கடேசன், 32; ஆகாஷ், 29; தண்டையார்பேட்டை சேர்ந்த கிஷோர்குமார், 29; செல்வதுரை,19 ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பி, கிஷோர் குமார், ஆகாஷ், கோபி ஆகிய மூவரும், சுவர் ஏறி குதிக்க முயன்றனர்.
அப்போது, கீழே விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் மூவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், கிஷோர்குமார் மீது இரு கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள்; ஆகாஷ் மீது ஒரு கொலை, இரு கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு வழக்குகள்; கோபி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட, மூன்று வழக்குகளும் உள்ளன.

