ADDED : ஜன 18, 2024 01:44 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஊராட்சியில் பல இடங்களில் குப்பை சாலை ஓரங்களில் குவியல்களாக கொட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் -- திருக்கச்சூர் சாலையில் பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
இந்த பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கோவிலுக்கு அருகில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகின்றன.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குப்பையை அகற்றுகின்றனர்.சில நேரங்களில் பல நாட்கள் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் குப்பை காற்றில் பறந்து சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் கோவிலில் சிறிது நேரம்கூட அமர முடிவது இல்லை. எனவே, இந்த பகுதியில் தினமும் முறையாக குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.