/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்க குழு... நடவடிக்கை: செங்கல்பட்டு விவசாயிகள் நிம்மதி
/
காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்க குழு... நடவடிக்கை: செங்கல்பட்டு விவசாயிகள் நிம்மதி
காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்க குழு... நடவடிக்கை: செங்கல்பட்டு விவசாயிகள் நிம்மதி
காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்க குழு... நடவடிக்கை: செங்கல்பட்டு விவசாயிகள் நிம்மதி
ADDED : ஜன 24, 2025 08:26 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாய நிலங்களில், நெல் பயிர், தோட்டக்கலை பயிர்களை சேதப்படும் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை குழு அமைத்துள்ளது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, வண்டலுார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், ஆகிய தாலுகாக்களில் விவசாய நிலங்கள் உள்ளன. மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய பகுதியில், மூன்று வனச்சரகங்கள் உள்ளன. இந்த மூன்று வனச்சரகங்களில் 42 ஆயிரம் 650 ஏக்கர் பரப்பளவு அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியில், மான், மயில், முயல், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. விவசாய நிலங்களில் உள்ள முட்புதர்கள், பாலாறு பகுதியில் உள்ள முட்புதர்கள் வளர்ந்த பகுதியில், காட்டுபன்றிகள் அதிக நடமாட்டம் உள்ளன.
இந்த காட்டுப்பன்றிகளுக்கு, வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், விவசாய நிலங்களில் பயிரிடும் நெல், மணிலா, கரும்பு தர்பூசணி ஆகியற்றை உண்ணுகிறது. இந்த பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்கள் மீது நடப்பதாலும், நிலப்பகுதியை தோண்டுவதாலும், பயிர்கள் சேதமடைகின்றன.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து, வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, அரசுக்கு கலெக்டர் அருண்ராஜ் விவசாயிகளின் கருத்துகளை பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு, மாவட்ட வன அலுவலர் ரவி மீனாவும் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, தமிழகத்தில், வன உயிரினங்களால் குறிப்பாக, யானை மற்றும் காட்டுப்பன்றிகளால், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க, வனத்துறையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டுள்ளது.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சிகளில், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், வனவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்க, கடந்த 9 ம் தேதி, அரசு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சிமன்ற தலைவர், வனவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவினர், விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை கண்டறிந்து, சேத விவரங்களை, வனச்சரக அலுவருக்கு, அறிக்கை அனுப்பி வைப்பர். அந்நிலத்தில் காட்டுப்பன்றிகள் வழக்கமாக நடமாடுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, இழப்பீட்டு தொகை வழங்குதல் மற்றும் தேவையான இடங்களில், காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய பரிந்துரையை சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலருக்கு அளிக்கும். வனச்சரக அலுவலரால் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் கூறும்போது, 'மாவட்டத்தில்ல, காட்டுப்பன்றிகள் கட்டுப்படுவது குறித்து தாசில்தார், வனத்துறை மற்றும் விவசாயிகளுடன் கூட்டம் நடத்த, வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.
காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீ., தொலைவு துாரம் வரை வரும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை. 1 கி.மீ., தொலைவு முதல் 3 கி.மீ., வரையுள்ள பகுதியில், காட்டுப்பன்றிகளை பிடித்து, வனப்பகுதியில், விட்டு விட வேண்டும். 3 கி.மீ. தொலைவிற்கு மேல் உள்ள பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- ரவி மீனா
மாவட்ட வன அலுவலர்
செங்கல்பட்டு.