/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'அம்ரூத்' திட்டத்தில் குண்டூர் ஏரி சீரமைப்பு வரும் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
'அம்ரூத்' திட்டத்தில் குண்டூர் ஏரி சீரமைப்பு வரும் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு
'அம்ரூத்' திட்டத்தில் குண்டூர் ஏரி சீரமைப்பு வரும் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு
'அம்ரூத்' திட்டத்தில் குண்டூர் ஏரி சீரமைப்பு வரும் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஜன 22, 2025 01:18 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு குண்டூர் ஏரி 'அம்ரூத்' திட்டத்தில் சீரமைக்கும் பணி முடிந்து, வரும் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில் குண்டூர் ஏரி அமைந்துள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, விவசாயம் நடந்து வந்தது.
நாளடைவில் விவசாய நிலங்களில் நகர்ப்பகுதிகள் உருவாக்கப்பட்டு, வீடுகள் பெருகின. தற்போது, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, நீராதாரமாக விளங்கி வருகிறது.
தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக, ஏரியில் இருந்து 1987ம் ஆண்டு 5 ஏக்கர் நிலம் வழங்கி, ஏரி கலங்கலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். உபரி நீர் வெளியேறுவதை தடுக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதன் பின், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இரண்டரை ஏக்கர் பரப்புள்ள இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதனால் தற்போது, ஏரியின் பரப்பளவு 29 ஏக்கராக குறைந்துள்ளது.
ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மும்மலைகளிலிருந்தும், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர் பகுதிகளிலிருந்தும் ஏரிக்கு நீர் வரத்து உள்ளது.
ஏரியின் பரப்பு குறைந்ததால், மழைக்காலத்தில் ஏரி விரைவில் நிரம்பி விடுகிறது.
ஏரி அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது. மேலும், ஏரி கலங்கலிலிருந்து உபரி நீர் வெளியேறி, தனியார் பள்ளி தடுப்புச்சுவர் வழியாக ராகவனார் தெரு, வேதாசலம் நகர், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, கொளவாய் ஏரியில் கலக்கிறது.
ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், மழைக்காலங்களில் ஆபத்து வராமல் இருக்க, இவர்கள் கரையை உடைத்து விடுகின்றனர்.
இதனால், ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இதை தவிர்க்க, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஏரியை துார் வாரி ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏரியை துார் வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது.
நீர்வளத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, மத்திய அரசு திட்டமான 'அம்ரூத்' திட்டத்தில், 2022- 23ம் ஆண்டு, 2 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துதல், நடைபாதை, மின் விளக்குகள், அலங்கார செடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணியை கடந்த 2023 மே மாதம் துவக்கி நடைபெற்று வருகிறது.
இப்பணியை விரைந்து முடிக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன் பின், ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது, ஏரிக்கரையின் மீது நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. .
குண்டூரில் ஏரியில், 'அம்ரூத்' திட்டத்தில் பணிகள் துவங்கி, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. நடைபாதை, மின் விளக்கு அமைக்கும் பணிகள் முடித்து, வரும் பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- ஆண்டவர்,
நகராட்சி கமிஷனர், செங்கல்பட்டு.