/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியை குத்திக்கொன்ற கணவன் கைது கள்ளக்காதலனுக்கும் சரமாரியாக வெட்டு
/
மனைவியை குத்திக்கொன்ற கணவன் கைது கள்ளக்காதலனுக்கும் சரமாரியாக வெட்டு
மனைவியை குத்திக்கொன்ற கணவன் கைது கள்ளக்காதலனுக்கும் சரமாரியாக வெட்டு
மனைவியை குத்திக்கொன்ற கணவன் கைது கள்ளக்காதலனுக்கும் சரமாரியாக வெட்டு
ADDED : ஜன 13, 2025 01:52 AM

மேடவாக்கம்:கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற இரண்டாவது கணவனை, மேடவாக்கம் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42. இவரது மனைவி ஜோதி, 28. தம்பதிக்கு ஜெகதீஷ், 13, தஷ்வின், 11, ஹரீஷ், 8, என மூன்று மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஏழு ஆண்டுகளுக்கு முன் மணிகண்டனும், ஜோதியும் பிரிந்தனர்.
அதே சமயம், மணிகண்டனின் அக்கா மருமகன் கிருஷ்ணமூர்த்தி, 38, என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தன் மூன்று பிள்ளைகளுடன் ஜோதியும், கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து, மேடவாக்கம் புதுநகரில் வீடு எடுத்து, ஒன்றாக தங்கினர்.
இந்நிலையில், ஜோதியை மொபைல் போனில், நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட மணிகண்டன், தான் சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாகவும், கோவில் பிரசாதத்தை, மகன்களுக்கு தர வேண்டும் எனவும் கூறி, அவரை பள்ளிக்கரணைக்கு வரவழைத்தார்.
அங்கு வந்த ஜோதியிடம், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும் தன்னுடன் வரும்படியும் கூறி, அவரிடம் சண்டை பிடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜோதி, தன் காலணியால் அவரை அடித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, கிருஷ்ணமூர்த்தியிடம் ஜோதி கூறியுள்ளார். மேடவாக்கம் கூட்டுச்சாலையில் மணிகண்டன் இருப்பதை அறிந்த இருவரும், உடனே அங்கு சென்றனர். மூவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜோதியை சரமாரியாக குத்தினார்.
ஜோதிக்கு கழுத்து, தலை மற்றும் வயிற்றில் பலத்த வெட்டுகாயங்கள் விழுந்தன. தடுக்க முயன்ற கிருஷ்ணமூர்த்திக்கு, நெஞ்சுக்கு கீழ் பகுதியில் சிறிய காயமும், இடது கை ஆள்காட்டி விரலிலும் வெட்டு விழுந்தது.
இதை பார்த்து, அங்கிருந்தோர் அதிர்ச்சியடைந்து, மணிகண்டனை சுற்றி வளைத்து பிடித்து, மேடவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை, அருகிலுள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்துவிட்டார். கிருஷ்ணமூர்த்தி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜோதியை திருமணம் செய்து கொள்ளும்முன், மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதேபோல், கிருஷ்ணமூர்த்திக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில், மனைவியை விட்டு, ஜோதியுடன் குடும்பம் நடத்தியதாக, மணிகண்டனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
***