/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிகளில் விதிமீறி அதிகளவில் மண் எடுப்பு அட்டூழியம் :உயிர் பலி ஏற்படும் என விவசாயிகள் பீதி
/
ஏரிகளில் விதிமீறி அதிகளவில் மண் எடுப்பு அட்டூழியம் :உயிர் பலி ஏற்படும் என விவசாயிகள் பீதி
ஏரிகளில் விதிமீறி அதிகளவில் மண் எடுப்பு அட்டூழியம் :உயிர் பலி ஏற்படும் என விவசாயிகள் பீதி
ஏரிகளில் விதிமீறி அதிகளவில் மண் எடுப்பு அட்டூழியம் :உயிர் பலி ஏற்படும் என விவசாயிகள் பீதி
ADDED : ஆக 04, 2025 02:15 AM

காஞ்சிபுரம்:நத்தாநல்லுார் மற்றும் ஆண்டி சிறுவள்ளூர் உள்ளிட்ட கிராமப்புற ஏரிகளில், அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்து, ஒப்பந்ததாரர்கள் அட்டூழியம் செய்வதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மழைக்காலத்தில் இப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கால்நடைகள், மனிதர்கள் சிக்கி உயிரிழப்பு ஏற்படலாம் எனவும், அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன.
இவற்றில் 381 ஏரிகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இந்த ஏரிகளில், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழைக்கு நிரம்பும் தண்ணீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 381 ஏரிகளில், கரை மற்றும் நீர்ப்பிடிப்பு அல்லாத விளை நிலங்கள் உள்ளன.
இது போன்ற ஏரிகளில், விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவது மற்றும் சாலை விரிவாக்க பணிக்கு சவுடு மண் அள்ளுவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், அளவுக்கு அதிகமாக ஏரியில் பள்ளம் தோண்டி, மண்ணை அள்ளி வருகின்றனர்.
இதனால், ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டு, மழைக்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் தாலுகா ஆண்டி சிறுவள்ளூர் கிராமம் மற்றும் வாலாஜாபாத் தாலுகா நத்தாநல்லுார் கிராம ஏரி பகுதிகளில், மண்ணை அள்ளி வருகின்றனர்.
பொதுவாக, எந்த ஏரியில் மண்ணை அள்ளினாலும், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மண்ணை அள்ள வேண்டும். அதாவது, 4 அடி ஆழம் வரை மண்ணை அள்ளலாம்.
ஆனால் ஒப்பந்ததாரர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, மண் எடுத்து வருகின்றனர் . அதை லாரிகளில் ஏற்றி, பல இடங்களுக்கு விற்றும் வருகின்றனர்.
இதை தடுக்க வேண்டிய நீர்வளத் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
ஏரியில் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால், டெண்டர் எடுத்தவர்கள் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவது வாடிக்கையாக உள்ளது. கேட்டால், மேற்பகுதியில் இருக்கும் மண்ணை எடுத்து, ஏரியின் கரை பகுதியில் கொட்டுகிறோம். 4 அடிக்கு கீழ் இருக்கும் சவுடு மண்ணை மட்டுமே அள்ளி வருகிறோம்.
தோண்டி எடுத்து கரையில் குவித்த மண்ணை, மீண்டும் ஏரிக்குள் தள்ளிவிடுவோம் என்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதில்லை. ஏற்கனவே, தென்னேரி ஏரியில் அளவுக்கு அதிகமாக தோண்டிய பள்ளங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியது.
பள்ளம் இருப்பது தெரியாமல், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அவற்றில் சிக்கி இறந்துள்ளன. இதே நிலை தான் நத்தாநல்லுார் ஏரியில் ஏற்படும்.
இது போன்று, கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் தண்ணீர் தேங்கும் பள்ளங்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும், அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தவும் தான் அரசிடம் முறையிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் வெளியிட விரும்பாத நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரிகளில், அளவுக்கு அதிகமாக மண்ணை அள்ள வேண்டாம் என, ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீறினால், ஒப்பந்தம் ரத்து செய்வதற்கு, துறை ரீதியாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இருப்பினும், மண் அள்ளப்படும் ஏரிகளில், கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.