/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ஏரி சீரமைப்புக்கு கூடுதலாக... ரூ.43 கோடி! ஆறு மாதங்களில் பணிகள் முடிக்க திட்டம்
/
மதுராந்தகம் ஏரி சீரமைப்புக்கு கூடுதலாக... ரூ.43 கோடி! ஆறு மாதங்களில் பணிகள் முடிக்க திட்டம்
மதுராந்தகம் ஏரி சீரமைப்புக்கு கூடுதலாக... ரூ.43 கோடி! ஆறு மாதங்களில் பணிகள் முடிக்க திட்டம்
மதுராந்தகம் ஏரி சீரமைப்புக்கு கூடுதலாக... ரூ.43 கோடி! ஆறு மாதங்களில் பணிகள் முடிக்க திட்டம்
ADDED : ஏப் 23, 2024 04:00 AM

காஞ்சிபுரம் : மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில், 2,853 ஏக்கர் பாசன வசதி தரும் மதுராந்தகம் ஏரியை சீரமைக்க, தமிழக அரசு மேலும் 43 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த 6 மாதங்களில், மதுராந்தகம் ஏரியின் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில், மதுராந்தகம் ஏரி முதன்மையானதாக உள்ளது. நகருக்கு வெளியே, 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், 2,411 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன.
மேலும், ஏரிக்கரையின் மொத்த நீளம் 3,950 மீட்டராக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில், 694 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். ஏரியிலிருந்து வடிந்து செல்லும் உபரி நீர், கிளியாற்றில் கலந்து, பின் பாலாற்றில் கலக்கிறது.
ஏரி துார் வாரும் பணி
இந்த ஏரியின் வாயிலாக, மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம், வளர்பிறை, முள்ளி, முன்னுாத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில், மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும், இந்த ஏரி வேகமாக நிரம்பியது. அடிக்கடி ஏரி நிரம்பினாலும், ஏரி தண்ணீர் விவசாயத்திற்கு போதாமல் இருந்தது.
இதற்கு முக்கிய காரணமாக, ஏரியின் 23 அடி உயரத்தில், 10 அடி உயரம் வரை வண்டல் மண் படிந்து காணப்பட்டது. மேலும், ஏரியின் கரை, ஷட்டர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சீரமைக்க வேண்டிய தேவை இருந்தது.
இந்நிலையில், ஏரியை துார் வாரி சீரமைக்க, கடந்த 2021ம் ஆண்டு, 120 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அதன்பின், கடந்த 2022, ஜூன் மாதம், ஏரி துார் வாரி சீரமைக்கும் பணிகள் துவங்கின.
ஏரியின் மதகு, கரை, நீர்வரத்து கால்வாய், கால்வாயின் பக்கவாட்டு சுவர் போன்ற பல்வேறு பணிகள், கடந்த இரு ஆண்டுகளாக நடந்தன.
ஏரி சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாயில், 90 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்நிலையில், ஏரியின் ஷட்டர்களை புதிதாக அமைக்கவும், அதற்கான போக்குவரத்து செலவு, ஏரிக்கு ஷட்டர்களை கொண்டு செல்லுதல், ஷட்டர் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு, கூடுதலாக 43 கோடி ரூபாயை, தமிழக நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் வாயிலாக, அடுத்தகட்ட பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக, நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, 2022, 2023 ஆகிய இரு ஆண்டுகளில் பெய்த பருவமழையின் போது, ஏரியில் நீர்தேக்கி வைத்து, பாசன வசதி பெற முடியவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2024ம் ஆண்டு பருவமழைக்குள் ஏரி சீரமைப்பு பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மதுராந்தகம் தாலுகா விவசாயிகள் எதிர்பார்த்துஉள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரி சீரமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான அரசாணை வந்துள்ளது. இன்னும் நிதி கிடைக்கவில்லை.
நிதி வந்தவுடன் பணிகள் துவக்கப்படும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே, 90 கோடி ரூபாய்க்கு மேலாக, மதகு, சுவர் அமைப்பது, கரை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை முடித்துள்ளோம்.
புதிதாக வரும் நிதி வாயிலாக, ஷட்டர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள இருக்கிறோம். பணிகள் முடிந்த பின், ஏரியில் நீர்த்தேக்கி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

