/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச காற்றாடி திருவிழா வரும் 14ல் துவக்கம்
/
சர்வதேச காற்றாடி திருவிழா வரும் 14ல் துவக்கம்
ADDED : ஆக 03, 2025 12:32 AM
மாமல்லபுரம்,:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், திருவிடந்தை கடற்கரையில், ஆக., 14 முதல் 17ம் தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மேம்பாடு கருதி, குளோபல் மீடியா பாக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மாமல்லபுரத்தில், கடந்த 2022, 2023ம் ஆண்டுகளில், சர்வதேச காற்றாடி திருவிழா நடத்தியது.
மாமல்லபுரத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக, 2024ல் திருவிடந்தை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது.
இவ்விழாவை, இந்த ஆண்டும் திருவிடந்தையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி மாலை துவங்கி 17ம் தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்க உள்ளதாக, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த காற்றாடி கலைஞர்கள் பங்கேற்று, விலங்குகள், கார்ட்டூன், கண்கவர் வண்ண காற்றாடிகளை பறக்க விடுகின்றனர்.
மேலும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி, உணவு, தின்பண்ட விற்பனை, இசை நிகழ்ச்சி ஆகியவையும் விழாவில் இடம் பெறுகின்றன.