/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏ.டி.எம்., மையம் திறக்க கீழக்கரணை மக்கள் கோரிக்கை
/
ஏ.டி.எம்., மையம் திறக்க கீழக்கரணை மக்கள் கோரிக்கை
ADDED : நவ 10, 2025 11:07 PM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கீழக் கரணை பகுதியில், ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி, 17வது வார்டில் உள்ள கீழக்கரணை பகுதியில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இங்கு, வீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த பகுதியில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால், மக்கள் நீண்ட துாரம் சென்று பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கீழக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிய செங்குன்றம், மெல்ரோசாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பகுதியில் எந்த வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரமும் இல்லை. இதனால் பணம் எடுக்க சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் என, 5 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், ஓய்வூதிய தொகை பெறுவோர், பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

