/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையை ஆறு வழியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையை ஆறு வழியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையை ஆறு வழியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையை ஆறு வழியாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 17, 2024 09:59 PM
திருப்போரூர்:கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, 17 கி.மீ., நீளம் கொண்டது. இரு பகுதிகளுக்கிடையே புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
கடந்த 1998ல், இச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்ததன் காரணமாக, இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு, தனியார் கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், இந்த பகுதியில் ஏற்பட்டன.
பின், ஐந்தாண்டுகளில் இச்சாலை, நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, தேவையான இடங்களில் சிறுபாலம், மையத்தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், சாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இப்பகுதி கல்லுாரி மற்றும் தொழிற்சாலை நிறுவனத்தினர், சாலையின் மையத்தடுப்பு பகுதியில், பூச்செடிகள் வளர்த்து பராமரிக்கின்றனர்.
தற்போது மாநில நெடுஞ்சாலைகளில், மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை உள்ளது. நாளுக்கு நாள் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
பிரதான ஓ.எம்.ஆர்., சாலை, ஜி.எஸ்.டி., சாலைகளை இணைப்பதுடன், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பல சாலைகள் பிரிந்து செல்கின்றன.
வாகன போக்குவரத்து அதிகரிப்பிற்கு ஏற்ப, தற்போதுள்ள நான்கு வழிச்சாலை போதுமானதாக இல்லை. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாத சாலையாக உள்ளதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, புதுப்பாக்கம், சோனலுார், மாம்பாக்கம், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கொளப்பாக்கம் சாலை சந்திப்புகளில் வாகனங்கள் திரும்பி செல்லும்போதும், குறுக்கே கடந்து செல்லும்போதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஆறுவழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையானது, புதுச்சேரி, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா வருவோர் மற்றும் சென்னை மீனம்பாக்கம் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும், ஓ.எம்.ஆர்., -- இ.சி.ஆர்., -- ஜி.எஸ்.டி., சாலை பகுதிகளில் வசிப்போர், மருத்துவமனைக்கு செல்ல, இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.