/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகர் பகுதிகளில் கழிவுநீரால் நிரம்பும் ஏரிகள்; நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
/
செங்கை புறநகர் பகுதிகளில் கழிவுநீரால் நிரம்பும் ஏரிகள்; நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
செங்கை புறநகர் பகுதிகளில் கழிவுநீரால் நிரம்பும் ஏரிகள்; நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
செங்கை புறநகர் பகுதிகளில் கழிவுநீரால் நிரம்பும் ஏரிகள்; நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்
ADDED : டிச 10, 2025 07:58 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளில், தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருவதால், நீர்நிலைகள் நாசமாகி வருகின்றன. குறிப்பாக, 10க்கும் மேற்பட்ட ஏரிகள் ஆண்டு முழுதும் கழிவுநீரால் நிரம்பி உள்ளதால், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட புறநகர் பகுதிகளில் செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகள் உள்ளன. காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஊராட்சிகள் உள்ளன.
இங்கு நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 69 பெரிய ஏரிகள் உள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் சிறிய ஏரிகள் மற்றும் தாங்கல் ஏரிகள் உள்ளன.
வளர்த்து வரும் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், நாளுக்கு நாள் நகரமயமாக்கல் காரணமாக தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, மக்கள் இந்த பகுதிகளில் வீடுகள் கட்டி குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு தனியார் கட்டுமான நிறுவனங்கள், இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகின்றன.
ஆனால், இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் விடப்பட்டு வருகிறது.
குறிப்பாக மறைமலை நகர் நின்னக்கரை ஏரி, காட்டாங்கொளத்துார் ஏரி, பொத்தேரி பெரிய ஏரி, திருத்தேரி ஏரி போன்ற 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் கழிவுநீர் விடப்பட்டு வருவதால், ஆண்டு முழுதும் இந்த ஏரிகள் நிரம்பியே உள்ளன.
இதன் காரணமாக, நகர் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்த பகுதியில், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், கழிவுநீர் தேங்கியுள்ள இந்த ஏரிகளில் இருந்து மீன் பிடித்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், அதை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தின் நீராதாரமாக உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை, நீர்வளத்துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறியதாவது: புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள், முறையாக துார்வாரப்படுவது இல்லை.
தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதி மற்றும் மாநில அரசின் நிதிகளில் இருந்து துார்வாரப்பட்டதாக கணக்கு மட்டும் காட்டப்பட்டு உள்ளது.
தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் போது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை, அதே பகுதியில் தோட்டம் அமைத்து பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. இதனால் கழிவுநீர் விடப்பட்டு, ஏரிகள் வீணாகி வருகின்றன.
மேலும், இதுபோன்ற ஏரிகளில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் அமைத்து நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், மக்களுக்கு குடிநீர் வழங்குகின்றன.
இந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

