/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 'ஆயுள்'
/
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 16, 2025 01:52 AM

செங்கல்பட்டு:தாம்பரத்தில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி.
இவர், 2018 மார்ச் 5ம் தேதி மாலை 5:30 மணியளவில் விளையாடிய போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 40, என்பவர், சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால், ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முருகனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின், சென்னை புழல் சிறையில் அவரை அடைத்தனர்.