/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
/
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
மேலக்கோட்டையூரில் காவல் நிலையம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 24, 2025 09:26 PM
திருப்போரூர்:தாழம்பூர் காவல் நிலையத்தின் எல்லைகளை மறு மாற்றம் செய்து, மேலக்கோட்டையூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1907ம் ஆண்டில் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே காவல் நிலையத்தின் கீழ், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன.
கடந்த, 1987ம் ஆண்டு, திருப்போரூரிலிருந்து பிரித்து, தாழம்பூர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
இக்காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் நாவலுார், தாழம்பூர், காரணை, பொன்மார், மேலக்கோட்டையூர், கண்டிகை உள்ளிட்ட, 20 கிராமங்கள் உள்ளன.
அதைத்தொடர்ந்து, 1997ம் ஆண்டு, திருப்போரூர் காவல் நிலையத்திலிருந்து கேளம்பாக்கம், மானாம்பதி ஆகிய இரு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பின், 2015ம் ஆண்டில் காயார் காவல் நிலையம் உருவானது. தற்போதுள்ள தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்களிலிருந்து, சில கிராமங்கள் பிரிக்கப்பட்டு, காயார் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டன.
இதில், மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் இருந்த கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்கள், அண்மையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டன.
இந்த தாழம்பூர் காவல் நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை எனும், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள நாவலுாரில் அமைந்துள்ளது.
ஆனால், வண்டலுார் சாலையில் உள்ள மாம்பாக்கம், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, ரத்தினமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், புகார் அளிக்க தாழம்பூர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு செல்ல வேண்டுமானால், கேளம்பாக்கம் சென்று, அங்கிருந்து தாழம்பூர் செல்ல வேண்டும்.
இதற்கு, இரண்டு பேருந்துகள் பிடித்துச் செல்வதுடன், கால விரயமும் ஆகிறது.
தற்போதுள்ள மேலக்கோட்டையூரில், விளையாட்டு பல்கலைக்கழகம், பிரபல தனியார் பல்கலைக்கழகம், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய மனை பிரிவுகள், தொழிற்சாலைகள், தனியார் பொறியியல் கல்லுாரிகள், காவலர் குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, தாழம்பூர் காவல் நிலையத்தின் எல்லைகளை மறு மாற்றம் செய்து, மேலக்கோட்டையூரில் புதிய காவல் நிலையத்தை ஏற்படுத்த, காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

