/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடனை திருப்பி கேட்டவர் கார் ஏற்றி கொலை
/
கடனை திருப்பி கேட்டவர் கார் ஏற்றி கொலை
ADDED : ஏப் 17, 2025 01:20 AM

மதுராந்தகம்:செங்கல்பட்டு படாளம் காவல் எல்லைக்குட்பட்ட மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்பாபு, 45. மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
மங்கலம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சிவராஜ், 30, தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, சரத்பாபு, அவர் வீட்டின் அருகே உள்ள பகுதியில், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிவராஜ், அவருக்கு சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்தார். திடீரென அங்கு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த சரத்பாபு மீது, மோதி உள்ளார்.
பலத்த படுகாயம் அடைந்த சரத் பாபுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த படாளம் போலீசார், வழக்கு பதிவு செய்து, சிவராஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
சரத்பாபு மற்றும் சிவராஜ் ஆகிய இருவரும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்துள்ளனர். சிவராஜ்க்கு , சரத்பாபு சில ஆண்டுகளுக்கு முன், 4 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். பல மாதங்கள் வட்டி கொடுத்த சிவராஜ், சில மாதங்களாக வட்டி கொடுக்கவில்லை.
இந்நிலையில் கொடுத்த பணத்தை சிவராஜிடம், சரத் பாபு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் நேற்று சரத்பாபுவை, கார் ஏற்றி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.