/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 தடத்தில் மினி பஸ்... அறிவிப்பு! வழித்தடத்திற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 தடத்தில் மினி பஸ்... அறிவிப்பு! வழித்தடத்திற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 தடத்தில் மினி பஸ்... அறிவிப்பு! வழித்தடத்திற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 தடத்தில் மினி பஸ்... அறிவிப்பு! வழித்தடத்திற்கு வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 07, 2025 12:17 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்க வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், மாவட்டத்தில் ஷேர் ஆட்டோக்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம், பொன்விளைந்தகளத்துார், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
கருத்து கேட்பு
இந்த ஆட்டோக்களில், சட்டத்திற்கு புறம்பாக 10க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர். கிராமப்புறங்களுக்குச் செல்லும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பலர் படுகாயமடைகின்றனர்.
உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. நகர்ப்புறத்தில், நகர பேருந்துகள் குறைவாக இயக்கப்படும் நிலையில், ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து, தமிழக அரசிதழில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த டிசம்பரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், கிராமப்புறங்களுக்கு சிற்றுந்துகள் அதிகமாக இயக்க வேண்டும். செங்கல்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பின், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சிற்றுந்து இயக்கப்பட உள்ள வழித்தடங்கள் குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.
இதையேற்று, 48 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கும் புதிய திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜன., 24ல் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பேருந்துகள் இயக்க வரும் 15ம் தேதிக்குள் தனியார் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் மே 1ம்தேதி முதல், சிற்றுந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கூறியதாவது:
பேருந்து நிலையங்களில் சிற்றுந்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி, அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்படும். ஓட்டுநர், நடத்துநர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 இருக்கையாக இருக்க வேண்டும்.
புதிய விரிவான திட்டத்தின் கீழ் சிற்றுந்துகள் இயக்க பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் தனியார் சிற்றுந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
48 வழித்தடங்கள் விபரம்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் - மகேந்திரா வேல்டு சிட்டி, செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லுாரி - உதயம்பாக்கம், ஆஞ்சநேயர் கோவில் புரந்தவாக்கம் - மகேந்திரா வேல்டு சிட்டி கூட்டுச்சாலை, நீலமங்கலம் பள்ளி கூட்டுச்சாலை - காட்டாங்கொளத்துார்.
காலவாக்கம் ஓ.எம்.ஆர்., சாலை - நென்மேலி அரசு சுகாதார நிலையம், தண்டரை கூட்டுச்சாலை - அனுமந்தபுரம் வீரபத்திரன் கோவில், ஆசான் கல்லுாரி கூட்டுச்சாலை - வீராணம் கூட்டுச்சாலை திருக்கழுக்குன்றம் புறவழிச்சாலை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் - நடராஜபுரம் கூட்டுச்சாலை, திருவடிசூலம் - பெரிய இரும்பேடு, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் - திருப்போரூர் பேருந்து நிலையம்.
ராட்டிணங்கிணறு - தெற்குப்பட்டு, கொட்டமேடு கூட்டுச்சாலை - முள்ளிப்பாக்கம் கூட்டுச்சாலை, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் - மறைமலைநகர் காவல் நிலையம் கூட்டுச்சாலை.
கள்ளபிரான்புரம் - மதுராந்தகம் பேருந்து நிலையம், புத்திரன்கோட்டை - கடப்பாக்கம், பெரியவெளிக்காடு கூட்ரோடு - பவுஞ்சூர், ஐயனார்கோவில் கூட்டுச்சாலை - வேடந்தாங்கல் கூட்ரோடு, மதுராந்தகம் பேருந்து நிலையம் - பொலம்பாக்கம், ஊனமலை கூட்ரோடு - மத்துார், சோத்துப்பாக்கம் - கொங்கரைமாம்பட்டு.
மேல்மருவத்துார் - பொற்பனைகரணை, மேல்மருவத்துார் - சிறுமையிலுார், மேல்மருவத்துார் - கீழ் அத்திவாக்கம், பணையார்குப்பம் - போந்துார், மதுராந்தகம் பேருந்து நிலையம் - கீழ்மருவத்துார், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் - பாக்கம்.
கொத்திமங்கலம் - சந்தனம்பட்டு, திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் - புதுப்பட்டினம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் - தண்டரை கூட்டுரோடு, திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் - பொன்பதர்கூடம், நல்லான்பிள்ளைபெற்றாள் - வெண்புருஷசம், கொத்திமங்கலம் கூட்டுச்சாலை - வெங்கப்பாக்கம்.
சோழிங்கநல்லுார் - ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை - பல்லாவரம், நன்மங்கலம் - குரோம்பேட்டை வெற்றி தியேட்டர், கோவிலம்பாக்கம் - குரோம்பேட்டை.
நாராயணபுரம் - மேடவாக்கம், நாராயணபுரம் - நாராயணபுரம் ரவுண்ட், கேம்ப்ரோடு - நல்லம்பாக்கம், மாம்பாக்கம் - குமிழி, தாம்பரம் - திருநீர் மலை, மண்ணிவாக்கம் - நாட்டரசன்பட்டு, கூடுவாஞ்சேரி - நல்லம்பாக்கம், மண்ணிவாக்கம் - ஏ.ஆர்.எம். கல்லுாரி சட்டமங்கலம், மண்ணிவாக்கம் - நடுவீரப்பட்டு, குரோம்பேட்டை ரயில் நிலையம் - மாடம்பாக்கம், கிளாம்பாக்கம் - கூடுவாஞ்சேரி.
கிராமப்புறங்களை நோக்கி சிற்றுந்துகள் வர உள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அன்றாடம் பணிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். நகரத்திற்குள் செல்லவும், அரசு மருத்துவமனைகளுக்கு முதியவர்கள் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
- த.சர்மிளா, செங்கல்பட்டு.