/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உள்ளாட்சி அமைப்பில் அடிப்படை வசதி செய்ய அமைச்சர் உத்தரவு
/
உள்ளாட்சி அமைப்பில் அடிப்படை வசதி செய்ய அமைச்சர் உத்தரவு
உள்ளாட்சி அமைப்பில் அடிப்படை வசதி செய்ய அமைச்சர் உத்தரவு
உள்ளாட்சி அமைப்பில் அடிப்படை வசதி செய்ய அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூன் 04, 2025 01:18 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலைந்துரையாடி மனுக்கள் பெறும் கூட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் சாலை, குடிநீர், இலவச வீட்டுமனை பட்டா, சுடுகாட்டிற்கு சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 210 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் பின், கீரப்பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக, 30 பயனாளிகளுக்கு அடுக்குமாடி வீடு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் சாலை, குடிநீர், மின் விளக்கு வசதிகளை, தேர்தலுக்குள் செய்து முடிக்க வேண்டும். இதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவில், 30,000 வீட்டுமனை பட்டா வழங்க, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின், வரும் 25ம் தேதி வர உள்ளார். அப்போது, வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள், நகர்ப்புறங்களுக்கு படிக்க வருகின்றனர். அவர்கள் வசதிக்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.