/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது சாலையில் வெள்ளைக்கோடு வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
புது சாலையில் வெள்ளைக்கோடு வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மார் 19, 2025 12:43 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டம், முள்ளிப்பாக்கம்- மானாமதி சாலை, 9 கி.மீ., தொலைவு உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள இச்சாலை குறுகியதாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்குச் சென்று வருவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் அரசிடம், இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 26 கோடி ரூபாய் மதிப்பில், அதற்கான பணிகள் கடந்த நிதி ஆண்டு துவங்கப்பட்டன.
இதில் சிறுபாலம், தரைப்பாலம் வரும் இடங்களில், பாலம் கட்டும் பணிளுடன் புதிய சாலை அமைக்கும் பணிகளும் முடிவடைந்தன.
இந்நிலையில், சாலை பணிகள் முடிந்து வாகன போக்குவரத்து துவங்கியும், சாலையின் நடுவே வெள்ளைக் கோடுகள் போடப்படாமல் இருந்தது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, பாதுகாப்பான போக்குவரத்திற்கு சாலை நடுவே வெள்ளைக் கோடு, வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.