/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயிரியல் பூங்கா துாதுவராக மாணவர்களுக்கு வாய்ப்பு
/
உயிரியல் பூங்கா துாதுவராக மாணவர்களுக்கு வாய்ப்பு
ADDED : மே 08, 2025 01:42 AM
வண்டலுார்:வண்டலுார், உயிரியல் பூங்காவின் துாதுவர்களாக மாணவர்கள் பணியாற்ற, பூங்கா நிர்வாகம் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து வண்டலுார் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துாதுவர்களாக பணியாற்ற, ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இரண்டு நாட்கள், பூங்காவிலுள்ள பாலுாட்டிகள், விலங்குகள் மற்றும் இதர உயிரினங்கள் பற்றிய செயல்பாடுகளை களத்தில் சென்று நேரடியாக பெறுவர்.
இதற்கான பயிற்சி வகுப்புகள் பூங்கா நிர்வாகிகள், வனவிலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்களால் நடத்தப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் உரிய வினாத்தாள், நிகழ்ச்சிக்கு வேண்டிய தொகுப்புகள் வழங்கப்படும்.
இந்த பயிற்சி வகுப்பு மே 14-15, 21-22, 28-29, 30-31, மற்றும் ஜூன் 4-5 என, தலா இரு நாட்கள் என, ஐந்து பிரிவாக நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும், 50 மாணவர்கள் பங்கேற்பர்.
பயிற்சி முடிவில், வண்டலுார் உயிரியல் பூங்கா துாதுவர் என்ற சான்றிதழ் மற்றும் 'பேட்ஜ்' வழங்கப்படும். தவிர, 10 முறை பூங்காவிற்கு இலவசமாக வந்து செல்லும் இலவச கடவுச் சீட்டும் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.aazp.in/summercamp2025/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.