/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொலை செய்து சிறை சென்ற ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்
/
கொலை செய்து சிறை சென்ற ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்
கொலை செய்து சிறை சென்ற ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்
கொலை செய்து சிறை சென்ற ஊராட்சி தலைவருக்கு மீண்டும் அதிகாரம்
ADDED : ஆக 12, 2025 11:03 PM

வண்டலுார் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
வண்டலுார்: தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் ஆறு மாதம் சிறை சென்று, ஜாமினில் வந்த வண்டலுார் ஊராட்சி தலைவருக்கு, மீண்டும் பதவி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, நேற்று காலை பகுதிவாசிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க.,வினர், வண்டலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி வெற்றி பெற்று ஊராட்சி தலைவராகவும், ஆராமுதன் ஒன்றிய கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வண்டலுார் ஊராட்சியில் முறைகேடுகள் அதிகமாகி, ஊழல் அதிகரித்தது. இது குறித்து கேள்வி எழுப்பியதால், ஊராட்சி தலைவர் முத்தமிழ்ச்செல்வி மற்றும் ஆராமுதன் இடையே கருத்து மோதல் உருவானது.
இருவரும் தி.மு.க., வினர் என்பதால், வண்டலுார் தி.மு.க.,வில் உட்கட்சி பூசலும் அதிகரித்தது.
இந்நிலையில், முத்தமிழ்ச்செல்வியின் ஊழல்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் தகுந்த ஆதாரங்களுடன் விளக்க, ஆராமுதன் தயாரானார். இது முத்தமிழ்ச்செல்விக்கு தெரிந்தது.
இந்நிலையில், 2024, பிப்., 29ம் தேதி, கூலிப்படை மூலமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும், ஆராமுதன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வண்டலுார் ஊராட்சி தலைவி முத்தமிழ்ச்செல்வி முதல் குற்றவாளி என, போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
இதனால் முத்தமிழ்ச்செல்வியின் ஊராட்சி தலைவருக்கான அதிகாரம், மாவட்ட கலெக்டரால் பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த அவர், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்து விட்டதாகவும், ஊராட்சி தலைவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கும்படியும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், முத்தமிழ்ச்செல்விக்கு மீண்டும், ஊராட்சி தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் கடந்த வாரம் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் முத்தமிழ்ச்செல்வி, தன் ஆதரவாளர்களுடன் வண்டலுார் ஊராட்சி அலுவலகம் வந்து, மீண்டும் பணிகளில் ஈடுபட துவங்கினார்.
கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்து, குண்டர் சட்டத்தில் சிறை சென்றவருக்கு, மீண்டும் ஊராட்சி தலைவருக்கான பதவி, அதிகாரம் வழங்கப்பட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை, பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தி.மு.க.,வினர், வண்டலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின், முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்ட அதிகாரம், ஊராட்சி தலைவர் பதவியை மாவட்ட நிர்வாகம் பறிக்க வேண்டும் என கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அதன் பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் முத்தமிழ்ச்செல்விக்கு மீண்டும் அதிகாரம் வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது.
கூலிப்படை வைத்து, நாட்டு வெடி குண்டு வீசி, தி.மு.க., நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், முத்தமிழ்ச்செல்வி முதல் குற்றவாளி என்பது வண்டலுார் மக்களுக்கு நன்றாக தெரியும்.
ஒரு கொலை குற்றத்தில் முதல் குற்றவாளியாக அறியப்பட்ட நபர், ஊராட்சி தலைவராக செயல்படும் போது, தங்களின் கோரிக்கை சார்ந்து அவரிடம் செல்ல, மக்கள் அச்சப்படுவர்.
இந்த நடவடிக்கையால், ஆளும் அரசின் மீது வண்டலுார் பகுதிவாசிகளிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.