/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் மழலையர் பள்ளிகள் மூடல் பெற்றோர் திரண்டு வாக்குவாதம்
/
கல்பாக்கம் மழலையர் பள்ளிகள் மூடல் பெற்றோர் திரண்டு வாக்குவாதம்
கல்பாக்கம் மழலையர் பள்ளிகள் மூடல் பெற்றோர் திரண்டு வாக்குவாதம்
கல்பாக்கம் மழலையர் பள்ளிகள் மூடல் பெற்றோர் திரண்டு வாக்குவாதம்
ADDED : மார் 31, 2025 02:05 AM
கல்பாக்கம்:கல்பாக்கம் மழலையர் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி, சுற்றுப்புற பகுதியினர் திரண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
அணுசக்தி துறையின் கீழ், கல்பாக்கத்தில் அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.
இங்கு பணியாற்றும் அறிவியலாளர்கள், பிற ஊழியர்கள் அனைவரும் கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்த இரண்டு நகரிய பகுதிகளில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், அணுசக்தி மத்திய பள்ளிகள் இயங்குகின்றன.
இது ஒருபுறமிருக்க, அணுசக்தி துறையின் கீழ் மழலையர் பள்ளிகள், எட்டு இடங்களில் இயங்குகின்றன.
அணுசக்தி நிறுவன ஊழியர்களின் குழந்தைகள், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியினரின் குழந்தைகள், இங்கு ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர்.
சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தனியார் மழலையர் பள்ளிகளை விட, இங்கு கட்டணம் மிகக் குறைவு.
இதில் பயின்று, நகரிய பள்ளிகளில் தொடர்ந்து பள்ளிக்கல்வியைத் தொடர கருதி, இந்த மழலையர் பள்ளிகளில் சேர்க்க, சுற்றுப்புற பகுதியினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, கல்பாக்கம் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்காததன் காரணமாக, 2025 - 26 கல்வியாண்டு மழலையர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக அறிவித்தது.
மேலும், நகரியத்தின் பிற பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் சேர்க்க அணுகுமாறும், நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுப்புற பகுதி பெற்றோர், கல்பாக்கத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் திரண்டனர். சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கூட்டம் கூடக் கூடாது என அறிவுறுத்தியதால், அவர்களுடன் பெற்றோர் வாதிட்டனர்.
அப்போது, அணுசக்தி துறை நிர்வாகத்திடம் பெற்றோர் முறையீட்டை தெரிவித்து, பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, மழலையர் பள்ளிகள் நிர்வாக தரப்பினர் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து,நண்பகல் 12:30 மணியளவில் பெற்றோர் கலைந்தனர்.