/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'வைபை' சேவையில் சிக்கல் ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
/
'வைபை' சேவையில் சிக்கல் ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
'வைபை' சேவையில் சிக்கல் ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
'வைபை' சேவையில் சிக்கல் ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
ADDED : ஜன 20, 2025 11:45 PM

சென்னை, நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இலவச 'வைபை' சேவை வழங்கப்படுகிறது. பயணியர் இந்த சேவையை, பெயரிடப்பட்ட 'நெட்வொர்க்'குகளை தேர்ந்தெடுத்து, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை, 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில், இலவச வைபை சேவை கிடைக்காமல் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னையில் இருந்து மும்பை, புதுடில்லி போன்ற நகரங்களுக்கு ஏராளமானோர் வேலை காரணங்களுக்காக செல்வதால் லேப்டாப், டேப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வர். இலவசமான மற்றும் பாதுகாக்கப்பட்ட வைபை சேவையை விமான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையில் சிக்கல் ஏற்படுகிறது. வைபை இணைப்பு கிடைக்காமல், பலரும் அவதிப்படுகின்றனர். அத்தியாவசிய சேவையாக வைபை இணைப்பு மாறியுள்ள நிலையில், இப்பிரச்னை பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகார் அளித்ததில், சம்பந்தமில்லாத பதில் தெரிவிக்கப்படுகிறது. சென்னை விமான நிலைய இயக்குனர் தலையிட்டு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் இயங்கும் மூன்று 'டெர்மினல்'களிலும் வைபை சேவை வழங்குவது, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படும். தற்போதுள்ள ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது.
மீண்டும் ஒப்பந்தம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், புதிய ஒப்பந்ததாரர்கள் யாரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதும், தடையின்றி வைபை சேவை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.