/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திடீர் மின் தடை காரணமாக செங்கையில் மக்கள் அவதி
/
திடீர் மின் தடை காரணமாக செங்கையில் மக்கள் அவதி
ADDED : ஏப் 11, 2025 10:56 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடையால், இரண்டரை மணி நேரம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் நத்தம், பழைய, புதிய பேருந்து நிலையம், வேதாசலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதிக்கு, திம்மாவரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நகர பகுதியில், நேற்று மாலை 3:00 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டதால், நகராட்சிகள் மற்றும் திம்மாவரம் கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த 20க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், திம்மாவரத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் மின்பாதையை ஆய்வு செய்த போது, திம்மாவரம் பகுதியில் மின் கம்பி பழுதடைந்தது தெரிந்தது.
அதன் பின், மின்கம்பியை சரி செய்து, மாலை 5:30 மணிக்கு மின் வினியோகம் சீரானது.
தற்போது, வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் நகரவாசிகள், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
திம்மாவரத்திலிருந்து, செங்கல்பட்டு நகருக்கு செல்லும் மின்பாதை கம்பி பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின் கம்பி பழுதடைந்தது. மின்கம்பியை மாற்றி, மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.