/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி கோவில் குளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
கருங்குழி கோவில் குளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 05, 2024 07:25 AM

மதுராந்தகம் : கருங்குழி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் குளம் முழுதும், ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது.
கொசு உற்பத்தி
தண்ணீர் இருப்பதே தெரியாத வகையில், ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பெரியபாளையத்தம்மன் கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். மதுராந்தகம் - - திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையோரம் குளம் உள்ளதால், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும்.
குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலத்தடி நீர் பாதிப்பு
மறைமலை நகர் நகராட்சி காட்டாங்கொளத்துார் -- கொருக்கந்தாங்கல் செல்லும் சாலையின் ஓரம் உள்ள குளத்தில், கடந்த 2013ம் ஆண்டு, நான்கு பக்கங்களிலும் கரைகள், நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
குளத்தை சுற்றிலும், பாதுகாப்புக்காக இரும்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த குளம், முறையாக பராமரிக்கப்படாததால், தண்ணீரில் பாசி படிந்து, மிகவும் அசுத்தமாகவும், குளம் முழுதும் ஆகாயத்தாமரை படர்ந்தும் காணப்படுகிறது.
பாதுகாப்புக்காக அமைப்பட்டிருந்த இரும்பு வேலி மற்றும் சிமென்ட் கம்பங்களை, மர்ம நபர்கள் உடைத்துச் சென்றுள்ளனர்.
சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.
எனவே, இந்த குளத்தை மீண்டும் பராமரித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

