sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நிரந்தர தீர்வு! மதுராந்தகம் அருகே செம்பூண்டியில் அணைக்கட்டு 50 ஆண்டு பிரச்னை தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

நிரந்தர தீர்வு! மதுராந்தகம் அருகே செம்பூண்டியில் அணைக்கட்டு 50 ஆண்டு பிரச்னை தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிரந்தர தீர்வு! மதுராந்தகம் அருகே செம்பூண்டியில் அணைக்கட்டு 50 ஆண்டு பிரச்னை தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

நிரந்தர தீர்வு! மதுராந்தகம் அருகே செம்பூண்டியில் அணைக்கட்டு 50 ஆண்டு பிரச்னை தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 07, 2024 01:47 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மதுராந்தகம் தாலுகா, செம்பூண்டி கிராமத்தில், கிளியாறு குறுக்கே, 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அணைக்கட்டு கட்டப்படுகிறது. 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், செம்பூண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில், கிளியாறு செல்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாடி கிராமத்தில் துவங்கும் கிளியாற்றில் இருந்து, வடகிழக்கு பருவமழை மற்றும் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், செம்பூண்டி வழியாக மதுராந்தகம் ஏரிக்கு செல்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், கிளியாற்றின் குறுக்கே மண்ணால் அணைக்கட்டு கட்டி, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.

கிளியாற்றில் அதிகமாக தண்ணீர் சென்றால், இந்த மண் அணைக்கட்டில் அடிக்கடி உடைப்பு ஏற்படும். அந்த நேரத்தில், கிராமவாசிகள் ஒன்று சேர்ந்து, அணைக்கட்டில் மணல் மூட்டைகளை அடுக்கி, உடைப்பை சீரமைப்பர்.

இவ்வாறு அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால், இப்பகுதியில் அணைக்கட்டு கட்ட வேண்டுமென, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், அணைக்கட்டு கட்டித் தருவதாக வாக்குறுதி அளிப்பர். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பின், கண்டுகொள்வதில்லை.

இதனால், உடைப்பு ஏற்படும் போது, கிளியாற்றில் செல்லும் தண்ணீர் மதுராந்தகம் ஏரிக்குச் சென்று, கடலில் கலந்து வந்தது.

இதையடுத்து, பருவமழை காலங்களில் கிளியாற்றில் வரும் தண்ணீரை, செம்பூண்டி ஏரிக்கு அனுப்பும் வகையில் அணைக்கட்டு கட்டினால், ஆண்டுக்கு இரண்டு முறை விவசாய சாகுபடி செய்ய முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். இதை ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி வைக்க, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

இதன்படி நீர்வளத் துறையினர், செம்பூண்டி கிளியாற்றில் கள ஆய்வு செய்து, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அணைக்கட்டு கட்ட, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.

இதை பரிசீலித்து, செம்பூண்டி கிளியாற்றில் அணைக்கட்டு கட்ட, நபார்டு திட்டத்தில் 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.

இதன் பின், அணைக்கட்டு கட்டுமான பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது, இப்பணியை விரைந்து துவக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

* அணைக்கட்டு விவரம்

கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டி, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில், இந்த அணைக்கட்டு அமைகிறது. அணைக்கட்டின் நீளம் 115 அடி, உயரம் 6 அடியாக அமைக்கப்படுகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 1,387 கன அடி நீர் வெளியேற்றப்படும்.செம்பூண்டி, வைப்பணை, லாடக்கரணை, பசுவங்கரணை உள்ளிட்ட 10 கிராமங்கள், இந்த அணைக்கட்டால் பயன்பெறும். 1,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும்.



* நீர்மட்டம் உயரும்


செம்பூண்டி கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும்படி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தோம். அணைக்கட்டு கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆண்டுக்கு இரண்டு முறை விவசாயம் நடைபெறும். நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.- எம்.பழனிவேல்ராஜ்,ஊராட்சி மன்ற தலைவர்,செம்பூண்டி,



* 9 மாதத்தில் முடியும்


கிளியாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட, 'டெண்டர்' விடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். அணைக்கட்டு பணி துவங்கி, ஒன்பது மாதங்களில் பணிகள் முடித்து, அணைக்கட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.- நீர்வளத்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.








      Dinamalar
      Follow us