/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிவு தேர்தல் கமிஷன் 70 சதவீத இலக்கு
/
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிவு தேர்தல் கமிஷன் 70 சதவீத இலக்கு
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிவு தேர்தல் கமிஷன் 70 சதவீத இலக்கு
சென்னை லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிவு தேர்தல் கமிஷன் 70 சதவீத இலக்கு
ADDED : மார் 10, 2024 12:44 AM
சென்னை மாவட்டத்தில் தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதே போல, 16 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
வடசென்னை லோக்சபா தொகுதியில், திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னையில் சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியும் கூடுதலாக இணைந்துள்ளன.
இதனால், சென்னை மாவட்டத்தில், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள், லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 4,676 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், சென்னைக்கு உட்பட்ட மூன்று லோக்சபா தொகுதிகளில் 59 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. அதைத் தொடர்ந்து, 2021 சட்டசபை தேர்தலில், மாநிலம் முழுதும் 71.79 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஆனால், தலைநகர் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தமாக 59.40 சதவீதம் மட்டுமே பதிவானது. அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாவட்டத்தில், 43.65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின.
சென்னையில் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஓட்டு சதவீதம் குறைவதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக, தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.
கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் வருமாறு:
↓ஆளும் அரசுகளின் மீதான அதிருப்தி மற்றும் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில், பெரும்பாலானோர் ஓட்டளிக்க முன் வருவதில்லை
↓குறிப்பிட்ட தொகுதிகள், தொடர்ந்து தனி தொகுதிகளாக இருப்பதால், அங்கு இதர சமூக வாக்காளர்கள் ஓட்டு அளிக்க விரும்புவதில்லை
↓'என் ஒரு ஓட்டு, யாரை வெற்றி பெற வைக்க போகிறது; என்ன மாற்றம் ஏற்பட போகிறது' என்பதே பெரும்பாலான வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது
↓தேர்தல் நேரத்தில் கிடைக்கும் பொது விடுமுறையை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தி கொள்ளுதல்
↓வசதி படைத்தோரில் பெரும்பாலானோர் ஓட்டளிக்காமல் இருப்பதால், தாங்கள் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்பதும் தெரியாமல் உள்ளனர்
↓நீர்நிலையோரம் வசித்தவர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கையின் கீழ் அரசின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அப்படி செல்லும்போது, தங்களது வாக்காளர் அட்டையை புதிய இடத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளாததால் அவர்களால் ஓட்டளிக்க முடியவில்லை
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவை அதிகரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கிறது.
குறிப்பாக, ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை கண்டறிந்து, அங்கு விழிப்புணர்வு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 70 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நிர்ணயித்து பணியாற்றி வருவதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வசதிப்படைத்தவர்கள் வாழும் இடங்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் ஆகியவற்றில், மக்களிடம் தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

