/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொங்கல் பானை தயாரிப்பு மும்முரம்
/
பொங்கல் பானை தயாரிப்பு மும்முரம்
ADDED : ஜன 05, 2025 01:21 AM

மாமல்லபுரம்:பொங்கல் பண்டிகைக்காக, மண்பானைகளை தொழிலாளர்கள் மும்முரமாக தயாரிக்கின்றனர்.
தமிழர் பண்டிகைகளில், தை மாத துவக்க நாளான பொங்கல் பண்டிகை முக்கியமானது. இப்பண்டிகை நாளில், வீடுகளில் புதிய மண்பானையில் பொங்கலிட்டு, ஒளி வழங்கும் சூரிய கடவுளை, நாம் வழிபடுகிறோம்.
முன்னோர் கால பாரம்பரிய சமையல், மண்பாண்டங்களைச் சார்ந்தே இருந்தது. அவற்றில் சமைக்கும் உணவு சத்துகள் மற்றும் சுவை மிக்கது. உலோக பாத்திரங்கள் வரவால், தற்காலத்தில் மண்பாண்ட பயன்பாடு குறைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது, மண்பானையில் பொங்கலிட, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மண்பாண்ட தொழில் அரிதாகி வரும் சூழலில், பொங்கலிடும் தேவைக்காக, சில பகுதிகளில், இத்தொழில் நடக்கிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மண்பானைகளை, மும்முரமாக தயாரிக்கின்றனர்.
கூவத்துார் அடுத்த, கடலுார் பகுதியில், மண்பானைகள் தயாரிப்பவர்கள் கூறியதாவது:
இக்கால மக்கள் மண்பாண்டங்களை தவிர்க்கின்றனர். சில குடும்பங்களே, இத்தொழில் செய்கிறோம். பொங்கலிடும் பெரிய, சிறிய பானைகள், மற்ற தேவைகளுக்கு மண்சட்டிகள், அகல் விளக்குகள் தயாரிக்கிறோம்.
சீசன் காலத்தில் மட்டும் தயாரிப்போம். நாங்கள் குறைவான விலைக்கே விற்கிறோம். லாபம் குறைவுதான். பரம்பரைத் தொழில் என்பதால், கைவிடாமல் தொடர்ந்து செய்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.