/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப்பணி... படுமந்தம்: இரண்டு ஆண்டுகளாகியும் கடும் இழுபறி
/
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப்பணி... படுமந்தம்: இரண்டு ஆண்டுகளாகியும் கடும் இழுபறி
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப்பணி... படுமந்தம்: இரண்டு ஆண்டுகளாகியும் கடும் இழுபறி
ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப்பணி... படுமந்தம்: இரண்டு ஆண்டுகளாகியும் கடும் இழுபறி
ADDED : டிச 24, 2025 06:04 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, 30கோடி ரூபாயில் ரயில்வே மேம்பால பணி துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆகியும் மந்தமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு வழியில்லாமல், 25 கிராம மக்கள் 10கி.மீ., சுற்றி செல்கின்றனர். பணியை விரைவாக முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த, ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பொன்விளைந்தகளத்துார், ஒத்திவாக்கம், பொன்பதர்கூடம், ஆனுார், வல்லிபுரம், பூதுார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள, ரயில்வே கடவுப்பாதையை கடந்து, கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு சென்று வருகின்றனர்.
அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை, இந்த கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில், அடிக்கடி ரயில்வே கடவுப்பாதை மூடப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, மேம்பாலம் கட்டித்தர மத்திய, மாநில அரசுகளிடம் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதன்பின், ரயில்வே துறையினர், கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தியதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே 2011 - 12ம் ஆண்டு 30.40 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரயில்வே துறை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தண்டவாளப் பகுதியில் மேம்பாலப்பணியை முடித்தது. அதன்பின், மேம்பாலம் கட்றட கூடுதலாக 33.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 2018ம் ஆண்டு, அரசு அனுமதி வழங்கியது.
இப்பணிக்கு, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி, ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதே ஆண்டு ஆகஸ்டில் மேம்பாலப் பணிக்கு 26.58 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இப்பணியை 2023ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
ரயில்வே கடவுப்பாதையில், திருக்கழுக்குன்றம் சாலையில் மேம்பாலப்பணி முடிவுற்று, மழைநீர் கால்வாய், இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒத்திவாக்கம் பகுதியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கி, 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
ரயில்வே பாலத்துடன், இணைக்கும் பணி நிறைவு பெற்றது. மற்ற பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இப் பணி டிசம்பர் மாதம் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டிலிருந்து ஒழலுார், மணப்பாக்கம், உதயம்பாக்கம் வழியாக, அரசு பேருந்துகள் மட்டும், பொன்விளைந்த களத்துார், பூதுார்வரை சென்று வருகிறது. தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி, கிராம மக்கள் சென்று வருகின்றனர். பாலப்பணியை விரைவாக முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

