/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் திணறல்
/
பாலுார் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஏப் 29, 2025 11:49 PM

மறைமலை நகர்,
பாலுார் -- கண்டிகை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலுார் -- கண்டிகை சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், கொளத்தாஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் கல் குவாரியில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட் மணல் உள்ளிட்டவை ஏற்றிச் செல்லும் நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், தினமும் இந்த சாலையில் செல்கின்றன.
ரெட்டிபாளையம், கரும்பாக்கம் கிராமங்களில் உள்ள செங்கல் சூளையில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளும், அதிக அளவில் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த சாலையில் பல இடங்களில், சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதனால், சீரமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில், அதிக அளவில் பள்ளங்கள் உள்ளன. குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலகம் எதிரில், பெரிய பள்ளம் பல ஆண்டுகளாக உள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதை முழுமையாக சரி செய்யாமல், வெறும் ஜல்லி கற்களை மட்டும் பள்ளத்தில் கொட்டி வருகின்றனர்.
அதில் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, சக வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த பள்ளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.