/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில்... அமோகம் சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியானது சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்வு
/
திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில்... அமோகம் சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியானது சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்வு
திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில்... அமோகம் சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியானது சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்வு
திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில்... அமோகம் சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியானது சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்வு
ADDED : ஆக 18, 2025 11:28 PM

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ள நிலையில், இங்கு சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவது, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், அசுர வளர்ச்சிஅடைந்து வருகிறது.
இங்கு ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், பல அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், புதிய மனைப் பிரிவுகள் உள்ளன.
போக்குவரத்து வசதிக்காக சிறுசேரி முதல் ஆலத்துார் வரை, ஓ.எம்.ஆர்., சாலையின் புறவழிச் சாலையாக, ஆறுவழிச் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கேளம்பாக்கம், படூர், சிறுசேரி, நாவலுார் உள்ளிட்ட பகுதிகள், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ளன.
ஓ.எம்.ஆர்., சாலையில் நாவலுார் முதல் பையனுார் வரை ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
குறிப்பாக சிறுசேரி சிப்காட் பகுதியில், 30க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. ஆலத்துார் சிட்கோவில் கெமிக்கல், மருந்து தொழிற்சாலைகள் என, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
குன்னப்பட்டு ஜப்பான் சிட்டி தொழில் நகரத்தில், 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, மேற்கண்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
பிரபல தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், பல்கலைகளும் திருப்போரூர் ஒன்றியத்தில் அதிகமான உள்ளன.
அதேபோல் நாவலுார், ஏகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 'மால்'கள் போன்ற பொழுதுபோக்கு மையங்களும் உள்ளன.
இப்பகுதிகளில் இருந்து சென்னை நகருக்குச் செல்ல கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன.
இவ்வாறு வேலை, கல்வி, மருத்துவம், சுற்றுலா, போக்குவரத்து வசதி என, அனைத்து அம்சங்களும் கொண்டதாக திருப்போரூர் ஒன்றியம் உள்ளதால், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் முதலீடுக்காக, திருப்போரூர் ஒன்றிய பகுதிகளைத் தேர்வு செய்து, இடம் வாங்கி முதலீடு செய்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிறிய கட்டுமான நிறுவனங்கள் முதல் முன்னணி பெரிய கட்டுமான நிறுவனங்கள் வரை, போட்டி போட்டுக் கொண்டு, புதிய மனைப் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களை உருவாக்கி, மக்களை ஈர்த்து வருகின்றன.
அசுர வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக இருப்பதால், மனைகள் வாங்கி முதலீடு செய்வது, வணிக பயன்பாட்டிற்காக இடம் வாங்குவது, மனை வாங்கி வீடு கட்டி குடியேறுவது, அடுக்குமாடி வீடுகள் வாங்குவது என, பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஆனால், திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதிகளில் மனை மற்றும் அடுக்குமாடி வீடுகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இங்கு சாமானிய மக்களால் மனை, வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை பகுதிகளில், சதுர அடி மற்றும் சென்ட் கணக்கில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஓ.எம். ஆர்., சாலையை ஒட்டியுள்ள இடங்களின் அமைவிடத்தைப் பொறுத்து, சதுர அடி இடம் 2,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஒரு சென்ட் கணக்கில், 9 லட்சம் முதல் 44 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டு தளங்கள் கொண்ட 'வில்லா' வீடுகள், உயர் சொகுசு அடுக்குமாடி வீடுகள், குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் முதல் 3.50 கோடி ரூபாய் வரை விலை போகின்றன.
ஓ.எம்.ஆர்., சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், நிலங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.
நாளுக்கு நாள், ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமடைந்து வந்தாலும், விலைவாசி அதிகரிப்பு காரணமாக நிலம் வாங்கி சொந்த வீடு கட்டுவது நடுத்தர, சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.
திருப்போரூர் ஒன்றியம் அசுர வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக இருப்பதால், மனைகள் வாங்கி வீடு கட்டி குடியேறுவது, அடுக்குமாடி வீடுகள் வாங்குவது என, பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது