/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட கோரிக்கை
/
வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட கோரிக்கை
ADDED : நவ 25, 2025 03:21 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா வாகன நுழைவுக் கட்டண வசூல் உரிமத்திற்கு, ஒன்றரை ஆண்டாக பொது ஏலம் நடத்தாமல் உள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பல்லவர் சிற்பங்கள் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணியர் கார், பேருந்து, வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, முந்தைய மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொது ஏலம் நடத்தியது.
ஆனால், கடந்தாண்டு இதற்கான பொது ஏலம் நடத்தப்படவில்லை. லோக்சபா தேர்தல், நகராட்சி நிர்வாக துறை அனுமதி தாமதம் போன்ற காரணங்களால், பொது ஏலம் நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
அத்துடன், மாமல்லபுரம் பேரூராட்சி நகராட்சியாக மாற்றமடைந்த பிறகும், வாகன நுழைவுக் கட்டண வசூலுக்கு பொது ஏலம் நடத்தப்படவில்லை. நகராட்சி நிர்வாகமே, கடந்த ஒன்றரை ஆண்டாக, அலுவலக ஊழியர்கள் மூலமாக நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது.
குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டிய ஊழியர்கள், இந்த நுழைவுக் கட்டணம் வசூல் வேலையிலும் ஈடுபடுவதால், மற்ற பணிகள் முடங்குகின்றன.
வார இறுதி நாள், விடுமுறை நாட்களில் சுற்றுலா வாகனங்கள் குவியும் போது, ஊழியர்கள் சிலர் கட்டண வசூலை குறைத்து, பொய் கணக்கு காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, மாமல்லபுரத்தில் வாகன நுழைவுக் கட்டண வசூல் உரிமத்திற்கு பொது ஏலம் நடத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

