/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூர் பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டுகோள்
/
ஆப்பூர் பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 16, 2025 01:09 AM

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தின் மலை மீது, பல்லவர் கால நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருமண தடை நீங்க, வேலை கிடைக்க வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் மூலவர், மலை மீது உள்ளார். இக்கோவிலின் உற்சவர் நித்யகல்யாண பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஆப்பூர் ஊருக்கு மத்தியில், அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் தனி கோவில் அமைந்து உள்ளது.
பஜனை கோவிலான இக்கோவிலின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு, அதில் பெரிய மரங்கள் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
தற்போது கோவில் சிதிலமடைந்து உள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர அச்சப்படுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் கோவிலுக்கு செல்கின்றனர்.
இதே வளாகத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலும், முறையாக பூஜை நடத்தப்படாமல் உள்ளது.
எனவே, பழமையான கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

