/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மின் கம்பங்களை மாற்ற கோரிக்கை
/
சேதமான மின் கம்பங்களை மாற்ற கோரிக்கை
ADDED : ஆக 20, 2025 02:34 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில் சேதமான மின் கம்பங்களை மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் சிப்காட் பகுதியில் 250க்கும் மேற்பட்ட வாகன உதிரி பாகங்கள் மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலைகளுக்கு மறைமலை நகர் துணை மின் நிலையத்தில் இருந்து, சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சிப்காட் பகுதியில் பெரியார் சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளின் ஓரத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மின் கம்பங்களை மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.