/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி எல்லை குழப்பத்தால் சாலை அமைப்பதில் இழுபறி
/
ஊராட்சி எல்லை குழப்பத்தால் சாலை அமைப்பதில் இழுபறி
ஊராட்சி எல்லை குழப்பத்தால் சாலை அமைப்பதில் இழுபறி
ஊராட்சி எல்லை குழப்பத்தால் சாலை அமைப்பதில் இழுபறி
ADDED : ஜன 01, 2026 05:05 AM

ஊனமாஞ்சேரி: வண்டலுார் தாலுகாவில், எல்லை குழப்பத்தால் இரு ஊராட்சிகள் இடையிலான சாலை, 25 ஆண்டாக சீரமைக்கப்படவில்லை. இதனால் பகுதி மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் தாலுகாவில் ஊனமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையாக ஜனக்புரி -- மதனபுரி சாலை உள்ளது.
ஊனமாஞ்சேரி மற்றும் நெடுங்குன்றம் எல்லை பகுதியில் வசிப்போரின் பிரதான வழித்தடமாக உள்ள இச்சாலை 220 மீ., நீளம், 6 மீ., அகலம் உள்ளது.
இரு ஊராட்சிகளுக்கும் பொதுவான எல்லையாக இந்த சாலை உள்ளதால், எந்த ஊராட்சி நிதியில் இருந்து சாலையை புனரமைப்பது என்பதில், கடந்த 25 ஆண்டாக இழுபறி, குழப்பம் நிலவி வருகிறது.
இதனால், மேடு பள்ளத்துடன், கரடு முரடாக உள்ள இந்த சாலையில், வாகனங்கள் பயணிக்க, மக்கள் நடந்து செல்ல, பெரும் சிரமம் உள்ளது.
பகுதி மக்கள் கூறியதாவது:
இரு ஊராட்சிகளின் எல்லையாக இருந்தாலும், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் கீழ்தான் இந்த சாலை வருகிறது.
எனவே, ஒன்றிய கவுன்சிலர் அல்லது மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சாலையை புனரமைக்கலாம்.
ஆனால், ஊராட்சி எல்லை பிரச்னையை காரணமாகக் கூறி, அனைத்து தரப்பிலும் இந்த சாலை புறக்கணிக்கப்படுகிறது.
இதனால், மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. தவிர, சாலையில் சிறு கற்கள் மிகுதியாக உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால் நூற்றாண்டாக புதுப்பிக்கப்படாத இந்த சாலையை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

