/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் 'ஆட்டை'
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் 'ஆட்டை'
ADDED : நவ 28, 2025 03:58 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து, 13 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத், 50. இவர், நிலத்தரகர் வேலை செய்து வருகிறார்.
நேற்று, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு, நேமம் அத்திவாக்கம் பகுதியில் உள்ள நிலத்திற்கான பத்திரப்பதிவு, அச்சிறுபாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், நிலம் விற்ற நபருக்கு செலுத்த வேண்டிய 13 லட்சம் ரூபாயை, ஷேக் தாவூத் தனக்குச் சொந்தமான மகேந்திரா எம்.ஜி., எலக்ட்ரிகல் காரில் வைத்துவிட்டு, நேற்று மாலை 4:00 மணியளவில், சார் - பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே வைத்திருந்த 13 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்துள்ளது.
இதுகுறித்து ஷேக் தாவூத், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

