/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
/
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
ADDED : டிச 19, 2024 11:46 PM
செங்கல்பட்டு, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், சாலை குறுக்கிடும் பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள், மழைக்காலம் முடிந்தவுடன் துவக்கப்படும் என, நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டலுார், பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை, இருங்குன்றப்பள்ளி, மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில், இரண்டு மேம்பாலங்கள் உள்ளன.
இங்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா சிட்டி, புக்கத்துறை, படாளம் கூட்டுச்சாலை, மேலவலம்பேட்டை, கருங்குழி ஆகிய இடங்களில், சாலை குறுக்கிடும் பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது.
சாலையை பராமரிக்க, செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கிறது.
ஆனால், சாலையை முறையாக பராமரிக்கவில்லை. மேலும், சாலைகளில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் பாலாற்றில் உள்ள பாலங்களில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் உள்ளன.
இச்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
பாலங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, விபத்து மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் விளக்குகள் எரியாததால், சாலை விபத்தில் நுாறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
இதைத் தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் விளக்குகளை எரிய வைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பினர்.
இந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படுவதாக, போலீஸ் எஸ்.பி., மற்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின், தேசிய நெடுஞ்சாலையில், உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில், புதிய உயர் கோபுர மின் விளக்குகள், பழுதான மின் விளக்குகள் சீரமைப்பிற்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி, கடந்த நவம்பரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள், சாலை குறுக்கிடும் பகுதிகளில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்தல், பாலாற்று பாலங்களில் புதிதாக மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிக்கு, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மழைக்காலம் முடிந்த பின், மின் விளக்குகள் அமைக்கும் பணிதுவக்கப்படும்.
- பொறியாளர்கள்,
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை.