/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சானடோரியம் மருத்துவமனை சாலைகள் நாசம் உள்நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமம்
/
சானடோரியம் மருத்துவமனை சாலைகள் நாசம் உள்நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமம்
சானடோரியம் மருத்துவமனை சாலைகள் நாசம் உள்நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமம்
சானடோரியம் மருத்துவமனை சாலைகள் நாசம் உள்நோயாளிகள் நடந்து செல்வதற்கே சிரமம்
ADDED : டிச 08, 2024 01:52 AM

குரோம்பேட்டை,:தாம்பரம் சானடோரியம், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், வார்டுகளுக்கு செல்லும் உட்புற சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலைக்கு மாறியுள்ளன. உள்நோயாளிகள் நடந்து செல்லக்கூட முடியாமல், சிரமப்படுகின்றனர்.
தாம்பரம் சானடோரியத்தில், அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயங்கி வருகிறது. இயற்கை சூழலுடன் கூடிய இம்மருத்துவமனை வளாகம், 74 ஏக்கர் பரப்பளவு உடையது. இதன் ஒரு பகுதியில், 75 கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் 33 வார்டுகள், 776 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை என கருதப்படும் இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர்.
தினசரி, 700 பேர் வெளிநோயளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்; 400க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு, காச நோய்க்கு மட்டுமின்றி எச்.ஐ.வி., ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டில் காச நோய்க்கு சிகிச்சை அளிக்கும் 400 மருத்துவமனைகளில், சிறந்த மருத்துவமனையாக, 2022ம் ஆண்டு, இம்மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.
பழமை மற்றும் சிறப்புமிக்க இம்மருத்துவமனை வளாகத்தில், வார்டுகளுக்கு செல்ல தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக, இச்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக படுமோசமான நிலையில் காணப்படுகின்றன.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து மருத்துவமனைக்குள் செல்லும் சிமென்ட் சாலை மட்டும் தான் ஓரளவிற்கு நன்றாக உள்ளது. வார்டுகளுக்கு செல்லும் தார் சாலைகள், நடப்பதற்கு கூட லாயகற்ற நிலையில் உள்ளன.
நடந்து செல்லும் நோயாளிகள், பள்ளங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர். நோயாளிகளை 'ஸ்டெச்சரில்' படுக்கவைத்து அழைத்து செல்லும் போது, துாக்கிப்போடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
மாலை நேரத்தில், நடைபயிற்சி செல்ல முடியவில்லை. மூன்று சக்கர வாகனம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்து பேட்டரி கார்களில் செல்லும் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
உணவு டெலிவரி செய்யும் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் செல்வதற்கும் சிரமமாக உள்ளது.
எனவே, காசநோய் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.