/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏழு ஆண்டாக நடக்கும் சுரங்கப்பாதை பணி அலைக்கழிப்பு! ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
/
ஏழு ஆண்டாக நடக்கும் சுரங்கப்பாதை பணி அலைக்கழிப்பு! ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
ஏழு ஆண்டாக நடக்கும் சுரங்கப்பாதை பணி அலைக்கழிப்பு! ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
ஏழு ஆண்டாக நடக்கும் சுரங்கப்பாதை பணி அலைக்கழிப்பு! ரயில்வே துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
ADDED : ஆக 17, 2024 02:08 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த ஏழு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அப்பகுதி முழுதும் குப்பை, கழிவுநீர் கொட்டி துார்க்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலை வழித்தடத்தில், சென்னை - விழுப்புரம் குறுக்கிடும் பகுதியில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இது அடிக்கடி மூடப்படுவதால், வாகன ஓட்டிகள், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க, 2012ம் ஆண்டு, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பின், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில், பழைய சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் சென்றுவர, சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ரயில்வே தண்டவாளம் பகுதியில், 2017ம் ஆண்டு, சுரங்கப்பாதை பணி துவக்கப்பட்டு, 80 சதவீத பணிகளை ரயில்வே நிர்வாகம் முடித்துள்ளது.
ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளனனர். தற்போது, சுரங்கப்பாதை உட்பகுதியில் கழிவுகளை கொட்டி துார்த்து வருகின்றனர்.
இங்கு, கழிவுநீர் தேங்கி, கொசுக்களின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால், அப்பகுதிவாசிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
மேலமையூர், வல்லம், ஆலப்பாக்கம், அமணம்பாக்கம், பட்ரவாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் கடந்து தினமும் சென்று வருகின்றனர்.
சுரங்கப்பாதை பணி முடியாததால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், அத்தியாவசிய பணி, வேலைக்கு செல்வோர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில், நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே பொறியாளர்கள் இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின், மக்கள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதிக்ககோரி, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் கருத்துரு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால் வெளியேற்றுவது குறித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் ரயில்வே நிர்வாகம் அறிக்கை கேட்டது. இதற்கு, சுரங்கப்பாதை அருகில் கிணறு அமைத்து, மின் மோட்டார் அமைத்து தண்ணீரை வெளியேற்றி, கொளவாய் ஏரிக்கு விடப்பட்டும் என, கடந்த மார்ச் மாதம், ரயில்வே அதிகாரிகளுக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் பதில் அறிக்கை அனுப்பினர்.
ஆனால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு, ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் நலன்கருதி, சுரங்கப்பாதை பணியை மீண்டும் துவக்க, ரயில்வே நிர்வாகம் அனுமதி தர வேண்டும் என, நெடுஞ்சாலை துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில்வே மேம்பாலத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். மேம்பாலத்தில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதனால், சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.வெங்கடேசன்,
அமணம்பாக்கம்.
மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்கள் சென்றுவரும் வகையிலும், இங்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை துவக்க, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன், உடனே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்படும்.
- நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள்,
செங்கல்பட்டு.